Friday, August 24, 2018

குண்டலினி எனும் சக்தி


From Acharya Babaji

#லலிதா #சஹஸ்ரநாமம் - #நாமாவளி 97-106 மற்றும் #விரிவான #விளக்கத்துடன். இதில் #விநாயகர் #அகவலில் சில வரிகளும் அதனுடன் #திருமந்திரத்தில் வரும் குறிப்பீடுகளும் சேர்த்து எழுதியுள்ளேன்.  

#மந்திர #ரூபம்

சமயாந்த:ஸ்தா;
சமயாசார தத்பரா;
மூலாதாரைக நிலையா;
ப்ரஹ்மக்ரந்தி விபேதினி;
மணிபூரந்தருதிதா;
விஷ்ணுக்ரந்தி விபேதினி;
ஆக்ஞா சக்ராதராலஸ்தா;
ருத்ரக்ரந்தி விபேதினி;
சஹஸ்ராரம்புஜாரூடா;
சுதாசாராபி வர்ஷிணி;

() சமயா = சமயாசார நெறிமுறைகளும் வழிபாடும்
அந்த:ஸ்தா = உள்ளுறைபவள்

# 97 சமயாந்த:ஸ்தா = சமயாசாரத்தின் வழிபாட்டு முறைகளுள் உறைபவள் (ஸ்ரீவித்யா உபாசனை முறையில் சமயாசார முறையும் ஒன்று. )

() சமயா = சமயாசார நெறிமுறைகளும் வழிபாடும்
ஆசார = மரபாச்சார பழக்க வழக்கங்கள்
தத்பரா = பிடித்தமான

# 98 சமயாசார தத்பரா = சமயாச்சார வழக்க முறைகளிலும் வழிபாடுகளிலும் ஈடுபாடு உடையவள்

() மூலாதார = மூலாதார சக்கரம் 
மூலாதாரைக = மூலாதாரத்தில்
நிலயா = இருப்பவள்

# 99 மூலாதாரைக நிலயா = மூலாதார சக்கரத்தில் நிலை கொண்டுள்ளவள் (மூலாதாரம் முதுகெலும்பின் அடிப்பாகத்தில் அமைந்துள்ளது)

() க்ரந்தி = முடிச்சு
ப்ரஹ்ம க்ரந்தி = மூலாதாரத்தின் ஆதார தேவதா தத்துவமாக பிரஹ்மா திகழ்கிறார்.
விபேதினி = துளைத்து

# 100 ப்ரஹ்மக்ரந்தி விபேதினி = ப்ரஹ்மக்ரந்தி எனும் நாடி-முடிச்சுத் தளைகளை துளைப்பவள் (ப்ரஹ்மக்ரந்தி மூலாதாரத்திற்கும் சுவாதிஶ்டானத்திற்கும் நடுவில் இருப்பதாக யோக சாஸ்திரம் கூறுகிறது)

() மணிபூர = மணிபூரக சக்கரம்
அந்தர் = உள்ளில்
உதிதா = எழுபவள்

# 101 மணிப்புராந்தருதிதா = மணிபூரக சக்கரத்தில் எழுபவள் (மணிபூரகம் தொப்புளுக்கு மேல் அமைதிருக்கிறது)

() க்ரந்தி = க்ரந்தி என்பது நாடிகளின் முடிச்சு
விஷ்ணு க்ரந்தி = மணிபூரகத்தின் தத்துவ தேவதா ஸ்வரூபமாக விஷ்ணு திகழ்கிறார்.
விபேதினி = உடைத்து - துளைத்து

# 102 விஷ்ணுக்ரந்தி விபேதினி = விஷ்ணுக்ரந்தி நாடி முடிச்சுத் தளைகளை உடைத்தெழுபவள் (யோக சாஸ்திரத்தின் படி, மணிபூரகத்திற்கும் அனாஹத சக்கரத்திற்கும் நடுவில் அமைந்திருப்பது விஷ்ணுக்ரந்தி)

() ஆக்ஞா சக்ரா = ஆக்ஞை சக்கரம்- ( நெற்றிக் கண் - ஞானக் கண் என்றும் சொல்லலாம்)
அந்தரால = நடுவே அமைந்த = இடைவெளியில் அமைந்த
ஸ்தா = இருத்தல்

# 103 அக்ஞா சக்ராந்தராலஸ்தா = ஆக்ஞா சக்கரத்தின் நடுவிலிருப்பவள் ( ஆக்ஞா சக்கரம் புருவ மத்தியின் பின் நிலைகொண்டிருப்பது)

() ருத்ர க்ரந்தி = ஆக்ஞை யின் தத்துவ விளக்க தேவதா ரூபமாக ருத்ரன் இருக்கிறார்
விபேதினி = துளைத்தல் - ஊடுருவு

# 104 ருத்ரக்ரந்தி விபேதினி = ருத்ரக்ரந்தி நாடி முடிச்சுத்தளைகளை ஊடுருவுபவள் (ருத்ரக்ரந்தி ஆக்ஞா சக்கரத்திற்கும் சஹஸ்ராரத்திற்கும் நடுவில் இருப்பதாக யோக நூல்கள் உரைக்கின்றன)

() சஹஸ்ரார = சஹஸ்ரார சக்கரம் 
அம்புஜா = தாமரை
ரூடா = ஏறு - எழுதல்

# 105 சஹஸ்ராராம்புஜாரூடா - சஹஸ்ரார பத்மத்தில் உயர்ந்தெழுபவள் (சஹஸ்ர சக்கரம் ஆயிரம் இதழ் கொண்ட கமலமாக உச்சந்தலையில் திகழ்வதாக விவரிக்கப்டுகிறது)

() சுதாசார = அமிர்த சொரிவு
வர்ஷ = மழை

# 106 சுதாசாரபிவர்ஷிணி = அம்ருத பிரவாகமாகப் பொழிபவள் .

***

குறிப்பு: சக்கரங்களும் நாடிக்ரந்திகளும் ஸ்தூலமானவை அல்ல. அவை சூக்ஷமானவை.
#குண்டலினி அல்லது #சக்கர #யோக #பயிற்சியை #முறையான #குருவிடமிருந்து #கற்காமல் #முயல்வது #ஆபத்தானது.

சக்கரங்களைத் தூண்டுவதென்பது மிகவும் நுட்பமான ஒன்று.

ஞானிகளாலேயே அது சாத்தியம். அடிப்படை சக்தி நிலையோடு விளையாடுவதால் அதனை எல்லாரும் செய்துவிட இயலாது. குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் சக்கரங்களைத் தூண்டுவது 
தொடர்பான ஏமாற்று வேலை ஏராளமாக நடைபெறுகிறது. 

#குண்டலினியை எழுப்புவது பற்றியும், நிறைய புத்தகங்கள் வந்து விட்டன.  ஆத்ம சாதனைகளை, ஆன்மீகப் பயிற்சிகளை இடையறாமல் செய்து வந்தாலே சக்தி நிலை இயல்பாக மேலெழும்பும். ஆன்மீகப் பயிற்சிகள் உரிய முதிர்ச்சி அடையும் போது சக்தி நிலை மேலெழும்புமே தவிர சக்கரங்களைத் தனித்தனியாகத் தூண்டுவதும் நல்லதல்ல.

அனுதினமும் விநாயகர் அகவல் பாராயணம் செய்ய  குண்டலினி சக்தி தானாகவே எழும். சில விநாயகர் அகவல் வரிகளையும் அதனுடன் திருமூலர் திருமந்திரத்தில் கூறியதை சிந்திப்போம்.

#பேசும் #மந்திரம்

இடைகலை, பிங்கலை, சுழுமுனைகளின் சுவாசத்தால் உண்டாகும் சத்தமே அஜபா 
(ஜபிக்காமல் எழும் ஒலி) எனப்பெறும். 'ஸோ' எனும் அசபையைச் சிவநாமம் எனச் ஜெபிப்பர். பிராணனை உட்கொள்ளும்போது ஸோ என ஏன்று, ஹம் என நிறுத்தித் 
தியானித்தலால், இது ஸோஹம் எனப் பெறும்; இது ஹம்ஸ மந்திரம் எனவும், 
சிவோஹம் எனவும், ஊமையெழுத்து எனவும் பெயர் பெறும்.

இந்தச் சாதனையில், சுழுமுனையில் ஏறும் குண்டலிக் கனல். அது கிளர்ந்தெழும் போது, தகதக என்று நரம்புகளில் தீக்கனலும். நாவில் மந்திரம் சுழல்வது போன்ற உணர்வு உதிக்கும். கிழக்கில் உதித்து மேற்கு நோக்கி விரையும் பரிதிபோல், உளவறிந்து, சுடர்வழியில் செல்லும் உயிர். இந்நிலையில் மேலுரைத்த அஜபா மந்திரம், வெளிப்படையாக உள்ளிருந்து ஒலிக்கும்.

41. குண்டலி யதனில் கூடிய அசபை
42. விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

குண்டலி அதனில் - குண்டலினி எனும் சக்தியுடன்,
கூடிய அசபை - கூடியிருக்கும் (உரைக்க முடியாத)
அம்ச மநுவை,
விண்டு எழு மந்திரம் - வாய் திறந்து சொல்லும் மந்திரமாக,
வெளிப்பட உரைத்து - வெளிப்படையாகக் கூறற்கு உரியதுபோல் கூறி (என்றவாறு).

வாய் திறந்து உரைக்க இயலாதது, அஜபா மந்திரம். இது குண்டலினியின் 
உள்ளொளியாய் அடங்கிப் ‘பேசாத மந்திரம்’ எனும் பெயரைப் பெற்றது.

அதனிலிருந்து பேசும் மந்திரம் பிறந்தது. இரண்டும் தனித்தனி ஓரெழுத்து மந்திரங்கள். இவைகளை வெளிப்படையாக எனக்குக் கணபதி விளங்க உபதேசித்தார் என்றபடி,

'அசபை யறிந்துள்ள அனலெழ நோக்கில்
இசையாது மண்ணில் பிறப்பு'
- எனும் ஔவை குறளும்.

'ஓங்காரி என்பா ளவளொரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை யுடையவள்
ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு 
ரீங்காரத் துள்ளே யினிதிருந் தாளே!'
- என்கிறார், மூலம் உணர்ந்த திருமூலர். 

அவர் மந்திரமும் இங்கு மனனம் கொள்ளற்கு உரியன. இனிய மூச்சை இழுப்பர்; நிறுத்துவர்; பின் வெளிவிடுவர். அக்காலத்தில் பிறக்கும் மகத்தான நுண்மை ஒலியே அசபா மந்திரம் என்பதை, மீட்டும் நினைவுறுத்துகிறோம். ஊமை மந்திரம் என்றும் இதற்குப் பெயர் உண்டு. 

மேலும் இது குறித்து,
'ஐந்தக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்து'
- எனும் 69'ம் அடியிலும் விளக்கப் பெற்றுள்ளது; ஆண்டும் அதையறிதல் நலம். அதாவது,

69. அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
70. நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்து 

அஞ்சு அக்கரத்தின் - ஐந்தெழுத்தின்,
அரும்பொருள் தன்னை - (உள்ள) அரிய பொருள் நுட்பங்களை,
நெஞ்சக் கருத்தின் - மன உணர்வில்,
நிலை அறிவித்து - நிலை பேறாம்படி உணர வைத்து 
(என்றவாறு).

'சிவாய நமஎனச் சித்தம் ஒருக்கி
அவாயம் அறவே அடிமைய தாக்கிச்
சிவாய சிவசிவ என்றென் றேசிந்தை
அவாயம் கெடநிற்க ஆனந்தம் ஆமே' - என்பர் திருமூலர். 

'மூச்சைச் சிவாய என உள்ளிழுத்து நிறுத்தி நம: என்று வெளிவிடு! அல்லது, சிவாய என உயிர்ப்பை வாங்கிச் சிவ என விடு! பலநாள் செய்யும் பயிற்சியில் இதயத் துடிப்பில் இன்பம். ஆஹா! ஊன்றி அதை உணர்! பலகாலப் பயிற்சியில், தானே இயல்பாக எழும் குண்டலினி, ஆதார கமலங்களையடைந்து, சஹஸ்ராரத்தைச் சாரும். 

அதன்பின் ஞான விண் நாதம் கேட்கும். முச்சுடர் திகுதிகு என முன்னே ஒளிரும். பந்தம் எல்லாம் அதனில் வெந்து சாம்பராம். அந்த அடையாளமேதான் அரிய திருநீறு. மலம் எல்லாம் நிர்மலமான நிலை இது. சொல்வது விளங்குகிறதா? ஔவையே! அறிவில் இந்நிலையை இலங்கக் கொள்!' என்று, ஆனைமுகப் பெருமான் அறிவுறுத்திய அருமையே அருமை.

'துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்த கூற்று
அஞ்ச உதைத்தன அஞ்செ ழுத்துமே'
- என்கிறார் ஆளுடைய பிள்ளையார்.

'நற்றவா! உனை நான் மறக்கினும்
சொல்லும் நா நமச்சி வாயவே'
- என்கிறார் சுந்தரமூர்த்திகள்.

'நற்றுணையாவது நமச்சிவாயவே!'
- என்கிறார் அப்பர் பெருமான்.

ந - மறைக்கும் சக்தி,
ம - மலம்,
சி - சிவம்,
வ - அருள்,
ய - ஆன்மா
- என்பது பொதுவாகக் குறிப்பிடும் புனித நடை.

ஆன்மா மறைப்பு நீங்கி, மலமகன்று, தானேயாய், வகர அருளை எய்தி, சிவத்தைச் சார்ந்து வீடு பெறல், ஐந்தக்கர நுட்பம்.

உலக பந்தம் உற்ற பொழுது, உயிரானது பாசமாம் மறைப்பையும், மலத்தையும் சார்ந்து நிற்கும். பந்தம் அகன்ற காலத்தில், மறைப்பையும் மலத்தையும் அகன்று, அருளை அடைந்து, சிவத்தைக் கூடி, பெரும்பேறு ஆன வீட்டைப் பெறும் என்று விரித்து விளக்க முதிர்ந்த அருள்நூல்கள் பெரிதும் முயன்றிருக்கின்றன என்பதை  அறிவோம்.

No comments:

Post a Comment