Tuesday, April 14, 2020

இந்து திருமண சடங்குகள்

சணாதன  தர்ம இந்திய கலாச்சார நமது பாரம்பரிய  திருமண சடங்குகள் பற்றிய 
முழூ தகவல்கள் உள்ளது உள்ளபடியே

 
இந்து திருமண #சமஸ்கிருத  மந்திரங்களின் #தமிழ் அர்த்தம்.

முதலில் செய்யப்படுவது விக்னேஸ்வர பூஜை, எனப்படும்  #கணபதிபூஜை. 

அடுத்ததாக #நவக்கிரகபூஜை. பிறகு விரதம். மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் கையில் காப்பு கட்டப்பட்டு அவர்கள் அக்கினியைத் தொழுகிறார்கள்

அடுத்தது #சங்கல்பம்.
 திருமணத்தின் மேன்மையான நோக்கங்களை நிறைவேற்ற உறுதி பூணுவதற்குப் பெயர் சங்கல்பம்.

#பாதபூஜை
தாய் தந்தையரின் பாதங்களை மணமகன் மற்றும் மணமகள் நீரால் கழுவி பாத பூஜை நடைபெறுகிறது.

 #கன்யாதானம்!

பெண்ணின் தந்தை மாப்பிள்ளையிடம் சொல்கிறார்:

‘‘இதோ, என் மகளை உமக்கு வழங்குகிறேன். இவள் எல்லாக் குணநலன்களும் பொருந்தியவள். இனிய இயல்புடையவள். அறிவில் தெளிவுடையவள். அணிகலன்கள் பூண்டு நிற்கும் இவள் உமது அறம், செல்வம், அன்பு அனைத்துக்கும் காவலாக இருப்பாள்...’’

#உறுதிமொழி

மாப்பிள்ளை மணப்பெண்ணை ஏற்றுக் கொண்டு மும்முறை உறுதி சொல்கிறார்:

‘‘இன்பத்திலும் துன்பத்திலும் இப்பிறப்பிலும் இதற்கப்பாலும் என்றென்றும் நான் இவளது துணைவனாக இருப்பேன்!’’ என்று.

மணப்பெண் தந்தை மாப்பிள்ளையிடம் சொல்வது

: ‘‘ஓ விஷ்ணுவே! அணிகலன்கள் பூண்ட என் மகளை உமக்கு வழங்குகிறேன். இதன் மூலம் எனது முந்தைய 10 தலைமுறை மற்றும் பிந்தைய 10 தலைமுறை வினைகளிலிருந்து விடுதலை பெறட்டும். எனக்கும் முக்தி கிடைக்கட்டும். அது இவள் மூலம் பிறந்த அறவழியில் நிற்கப் போகும் குழந்தைகளின் மூலம் நிகழட்டும்! அவர்கள் திருமாலையும், திருமகளையும் தொழுது அதன் மூலம் எனக்கு பிரம்மலோகப் பதவி கிடைக்கட்டும். பூமித்தாயும் படைப்பைத் தாங்கும் சக்தியும், எல்லாத் தேவர்களும், அனைத்து உயிரினங்களும் எனது மூதாதையர்கள் முக்தியடையும் பொருட்டு நான் செய்யும் இந்தக் கன்யாதானத்திற்கு சாட்‌சியாய் நிற்கட்டும்!’’

பின் மாப்பிள்ளையிடம், ‘‘பக்தி, செல்வம், ஆசை இவற்றை நிறைவேற்றிக் கொள்வதில் இவளுக்கு இடையூறு நேரக் கூடாது’’ என்க, மாப்பிள்ளை பதிலுக்கு ‘‘நான் அவளுக்கு இடையூறு செய்ய மாட்டேன்’’ என்று மும்முறை உறுதி கூறுகிறார்.

#தாலி_கட்டுதல் (மாங்கல்ய தாரணம்)

மணமகன் அவள் கழுத்தில் மங்கல நாண் அணிவித்து ஒரு முடிச்சுப் போட, அவனது சகோதரியர் இன்னும் இரு முடிச்சுகளைப் போடுகிறார்கள். மங்கல நாணை அணிவிக்கையில் மாப்பிள்ளை
தாலி கட்டும்போது சொல்லும் மந்திரம்

“மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்”

உன்னோடு நான் வாழவேண்டி
இந்த மங்கல நானை உன் கழுத்தில் அணிவிக்கிறேன்.
மிகச் சிறந்த குண நலன்களை உடையவளே
எல்லாப் பேறுகளும் பெற்று நீ நூறாண்டு நிறைவான வாழ்க்கை வாழ இறை அருள்வதாக!’’

அதன்பின் அக்னியை நோக்கி அவன் அவளை அழைத்து வரும்போது சொல்லும் மந்திரம்:

‘‘பூஷா தேவதை உன்னை அக்னியின் முன்னிலைக்கு பத்திரமாக அழைத்துச் செல்லட்டும். அஸ்வினி தேவதைகள் என் வீட்டுக்கு உன்னை பாதுகாப்புடன் அழைத்து வரட்டும். பல மங்கலமான செயல்களில் என்னைத் தூண்டப்போகும் பெண்ணே! என் வீட்டின் ராணியாக அடியெடுத்து வை!’’

இதற்குப் பின் 
#பாணிக்கிரஹணம்.

மணமகளின் கரத்தைத் தன் கைக்குள் அடக்கிக் கொண்டு மணமகன்,

‘‘ஓ பண்புள்ள பெண்ணே! நீ கடவுளர்களுக்குச் சொந்தமான செல்வம். அவர்கள் கருணை மேலிட்டு நான் இல்லறம் பேணுவதற்காய் உன்னை எனக்கு அளித்துள்ளார்கள். முதுமையிலும் நாம் பிரியாமல் நீடு வாழ்வோமாக! உன் திருக்கரம் பற்றியே நான் இல்லறம் எனும் நிலைவாயிலில் நுழைகிறேன். முன்னோடிகளான பகன் மற்றும் அக்னியின் ஆசிகள் எனக்குண்டு’’

பிறகு சரஸ்வதி தேவியையும், வாயுவையும் தொழுகிறார்கள்.

#அக்னி_வலம்_வருதல்
.
பின் இருவரும் அக்னியை வலம் வருகிறார்கள். அப்போது சொல்லும்
 #சப்தபதி மந்திரங்கள்

மணமகன் மணமகளிடம் சொல்வது:

மணமகளின் பாதம் தொட்டு, மெட்டி அணிவித்து ஏழு அடிகள் அவள் எடுத்து வைக்க உதவுகிறான் மணமகன். இது ‘சப்தபதி’ எனப்படுகிறது. அப்போது சொல்லும் மந்திரங்கள்

ஸகா! சப்தபதா! பவ ஸாக்யோவ்! சப்தபதா! பாபூவா!

என்னுடன் ஏழு அடிகள் எடுத்து வைத்து நீ என் சிறந்த தோழி ஆவாய்.

ஸக்யம் தே கமே யம் ஸக்யாத் தே மாயோஷம் ஸகயன் மே!

நாம் இணைவது தெய்வத்தின் ஆணையாகக் கருதுவதால், இந்த பந்தத்தில் இருந்து நான் என்றும் விடுபடமாட்டேன்.

மாயோஷ்ட சமயாவ சமயாவ சங்கல்பாவஹை சம்ப்ரியோவ்

அன்போடும் பாசத்தோடும் இணைந்து நாம் எல்லாச் செயல்களையும் இணைந்தே செய்வோம்

ரோசிஷ்ணு சுமனஸ்யமநோவ் இஷாமூர்ஜம் அபி ஸ்வசாநோவ்

நாம் எண்ணத்தாலும் செயலாலும் நண்பர்களாக இருப்போம். நம் கடமைகளையும் கர்மாக்களையும் இணைந்தே செய்வோம்

மனக்ஹும்சி சம்வ்ரதாஸ் ஸ்மு சித்தானி ஆகாரம் சத்வமாசி

நீ பாடல் எனில் நான் இசையாக இருக்கிறேன், நீ இசை எனில் நான் பாடலாக இருக்கிறேன்.

அமூஹம் அமூஹமாஸ்மி ஸா த்வம் த்யோவ்றஹம்

நான் ஆகாசமாக இருக்கிறேன் நீ பூமியாக இருக்கிறாய்

பருத்திவீ தவம் ரேதோ அஹம் ரேதோ பிருத்வம் மனோஹமஸ்மி

நான் செயலின் ஆதாரமாக இருக்கிறேன் நீ செலுத்தும் ஆற்றலாக இருக்கிறாய்

வாக் தவம் ஸாமா ஹம் அஸ்மி ருக்த்வம் சாமாம்

நான் எண்ணங்களாக இருக்கிறேன் நீ அதைச் சொல்லும் வாக்காக இருக்கிறாய்

அனுவ்ரதா பாவ பும்சே பும்சே புத்ராய வேத்தவை

நீ வார்த்தைகளாக இருக்கிறாய் நான் அதன் பொருளாக (அர்த்தம்) இருக்கிறேன்

ஸ்ரீயை புத்ராய வேத்தவை ஏஹி ஸூந்ரூரூதே||

நீ உன் அன்பான வார்த்தைகளால் என் வாழ்நாட்களை நிரப்பு, என் ஆற்றலாய் இருந்து நம் வாழ்வை மகிழ்ச்சியால் செழிக்கச் செய்வாயாக, நம் குடும்பம் குழந்தைகளால் செழித்து வளர உதவுவாயாக.

முதலடி:

ஏகமிஷே விஷ்ணுத்வ அன்வேது
தெய்வ சாட்சியாக எடுத்து வைக்கும் முதல் அடி

இரண்டாவதடி:

த்வே ஊர்ஜ்வே விஷ்ணுத்வ அன்வேது
உனக்கும் நம் சந்ததிகளுக்கும் அளவில்லாத உணவுகளைக் கொடுக்க கடமைப்படுகிறேன். உனக்கு அளவில்லாத ஆற்றலும் ஆரோக்கியமும் அளிக்க உறுதிகொள்கிறேன்

மூன்றாமடி:

த்ரீணீ வ்ருத்தவ விஷ்ணுத்வ அன்வேது
வேதங்களில் சொன்னபடி உன் வாழ்நாள் முழுதும் உன் கடமைகளை பூர்த்தி செய்ய நான் துணையிருக்க கடமைப்படுகிறேன். உன் விரதங்களை(கடமை) அனுஷ்டிக்க துணையிருப்பேனென உறுதிகொள்கிறேன்

நாலாமடி:

சத்வாரி மாயோ விஷ்ணுத்வ அன்வேது
நீ வாழ்நாள் முழுதும் மகிழ்ந்திருக்கச் செய்ய கடமைப்படுகிறேன்.உனக்கு மகிழ்ச்சியைத் தருவேனென உறுதிகொள்கிறேன்

ஐந்தாமடி:

பஞ்ச பசுப்ய: விஷ்ணுத்வ அன்வேது
நீ உன் வீட்டில் வளர்க்கும் செல்லபிராணிகளுக்கும், பசுக்களுக்கும், பயிர்களுக்கும் பாதுகாப்பாயிருந்து அவை பெருகி வளம் கொழிக்கச் செய்யவும் துணையிருக்க கடமைப்படுகிறேன். நீ பராமரிக்கும் செல்லப்பிராணிகள், பசுக்கள் போன்றவை பெருகத் துணையிருப்பேனென உறுதிகொள்கிறேன்.

ஆறாமடி:

சத்ரு துப்யா: விஷ்ணுத்வ அன்வேது
மழை வெயில் பனி போன்ற எல்லா காலங்களிலும் நீயும் நம் சந்ததியினரும் பாதுகாப்பாக இருக்கத் துணையிருக்க கடமைப்படுகிறேன்.உனக்கு துன்பம் வராமல், எல்லா காலங்களிலும் காப்பேன் என உறுதிகொள்கிறேன்.

ஏழாமடி:

சப்த சப்தப்யா: விஷ்ணுத்வ அன்வேது
அக்னி வளர்த்து நீ செய்யும் செயல்கள் வெற்றிபெற துணையிருக்கவும், உனக்கு இடைஞ்சல்கள், தீங்கு நேராமல் காக்கும்படி கடமைப்படுகிறேன்.நீ அக்னி வளர்த்து செய்யும் செயல்கள் எல்லாவற்றிற்கும் இடைஞ்சலில்லாமல் பார்த்துக் கொள்வேன் என உறுதிகொள்கிறேன்.

இருவரும் சொல்வது

ஓம் ஏகோ விஷ்ணுஜர்கத்ஸ்வரம், வ்யாஸம் யேன சராசரம்! ஹ்ருதயே யஸ்ததோ யஸ்ய! தஸ்ய ஸாக்ஷி ப்ரதீயதாம்!

மணமகன் சொல்வது: என் இணையே! நம் ஹ்ருதயபூர்வ அன்பினால் இணைந்து இந்த முதல் காலடி எடுத்து வைக்கிறோம். நீ நம் ஆரோக்கியத்திற்கு உகந்த உணவுகளைச் சமைப்பாயாக. என் செயல்பாடுகள் ஒவ்வொன்றிற்கும் உன் துணையையும் வேண்டுகிறேன். நீ நம் குடும்ப மேன்மைக்கு உதவியாய் இருப்பாயாக. நீயும் நம் சந்ததிகளும் மகிழ்வுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டிய செல்வ-நலன்களுக்காக உழைத்து உங்களைப் பேணுவேன் என்று உறுதி கூறுகிறேன். நீ என்னைப் பேணுவாயாக.

ஓம் இஷ ஏகபதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வானயுது புத்ரான் வின்தாவஹை! பஹூம்ஸ்தே ஸந்து ஜரதஷ்டய:

மணமகள் சொல்வது: உன்னிடம் நானும் அன்பினால் பணிந்து இணைகிறேன். நீ உன் வீட்டின் பொறுப்புக்கள் அனைத்தையும் என்னிடம் அளித்துவிடு. உனக்கான உணவை நானே தருகிறேன். நீ நம் குடும்பத்திற்காக ஈட்டிவரும் செல்வங்களை பேணி வளர்த்து செழிக்கச் செய்கிறேன் என்று உறுதி கூறுகிறேன். நம் குழந்தைகளும் நாமும் ஆரோக்கியத்துடனும் மகிழ்வுடனும் இருக்க பார்த்துக்கொள்ளும்படி நீ என்னைப் பேணுவாயாக.

ஓம் ஜீவாத்மா பரமாத்மா ச, ப்ருத்வி ஆகாஷமேவ ச! சூர்யசந்த்ரத்வயேமர்த்தயே, தஸ்ய சாக்ஷி ப்ரதீயதாம்!!

அன்பே! ஜீவனும் ஆத்மாவும் போல என்னில் இரண்டரக் கலந்த நீ, என்னோடு இரண்டாமடி எடுத்து வைத்து விட்டாய். பூமி ஆகாசத்தை நிரப்பி, ஆகாசத்தின் இருப்பைக் குறிப்பது போல, என் இதயத்தை உன் அன்பின் ஆற்றலால் நிரப்பி உறுதியாக்கு. உன் மகிழ்ச்சியாலேயே என் இதயம் உறுதியாகும்.அப்போதுதான் நானும் மகிழ்ந்திருப்பேன். நாம் இணைந்து நம் குடும்பத்தையும் குழந்தைகளையும் காப்பாற்றுவாயாக.

ஓம் ஊர்ஜே த்விபதீ பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வானயு புத்ரான் வின்தாவஹை, பஹூம்ஸ்தே ஸந்து ஜரதஷ்ட்ய:!!

என் அன்பே! நீ துக்கமடைந்திருக்கும்போது, உன் இதயத்தை என் அன்பின் ஆற்றலால் நிரப்புவேன். நீ சந்தோஷமாயிருக்கும்போது நானும் மகிழ்ந்திருப்பேன். உன்னை என் அன்பான வார்த்தைகளால் மகிழ்வுறச் செய்வேன் என்று உறுதிகொள்கிறேன். நம் குடும்பத்தையும் குழந்தைகளையும் உன் மனைவியாக உன்னோடு இணைந்து காப்பேன் என்று உறுதிகூறுகிறேன்.

ஒம் த்ரிகுணாஷ்ச த்ரிதேவாஷ்ச, த்ரிசக்தி: சத்பராயண:!! லோகத்ரயே த்ரிஸந்த்யாயா: தஸ்ய ஸாக்ஷீ ப்ரதீயதாம்!

அன்பே! இப்போது என்னோடு மூன்றடிகள் நடந்துவிட்டாய். மங்களங்கள் நிறைந்த உன் கரங்களைப் பற்றிய எனக்கு இந்தப் புண்ணியத்தால் செல்வச் செழிப்பு நிறைந்து வளம் பெருகப்போகிறது. இன்றிலிருந்து உன்னைத் தவிர மற்ற பெண்கள் அனைவருமே என் தாய்கும் சகோதரிக்கும் ஒப்பாகக் கருதுவேன். நம் குழந்தைகளுக்கு கல்விச்செல்வத்தை நாம் இணைந்து அளிக்கலாம் கல்வி செல்வம் பெருகி அவர்கள் நீடூழி வாழட்டும்.

ஓம் ராயஸ்போஷாய த்ரிபதீ பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வானயு புத்ரான் வின்தாவஹை, பஹூம்ஸ்தே ஸந்து ஜரதஷ்ட்ய:!!

அன்பே! என் ஹ்ருதயபூர்வமாய் உன்னை விரும்புகிறேன், என் கணவனாக வரித்து உன் நலனையே குறித்திருப்பேன். மற்ற ஆண்கள் அனைவருமே என் தந்தைக்கும் சகோதரனுக்கும் ஒப்பாகக் கருதுவேன். நீயே என் மகிழ்ச்சியாக இருக்கிறாய்.

ஓம் சதுர்முகஸ்த்தோ ப்ரம்மா, சத்வாரோ வேதஸம்பவா: சதுர்யுகா: ப்ரவதந்த்ரே தேஷாம் சாக்ஷீ ப்ரதீயதாம்!!

அன்பே! என் பூர்வபுண்ணியங்களின் பலனாகவே உன்னோடு இந்த நான்காம் அடி எடுத்து வைக்கிறேன். என் வாழ்வில் சர்வமங்களங்கள் உன்னோடு வருகின்றது. நீ எனக்கு கர்மாக்கள் செய்யும் தகுதியுடைய புண்ணியத்தை தருகிறாய். நமக்கு செரிந்த அறிவும், பணிவும், மேன்மையும் கூடிய மக்கட்செல்வம் உண்டாகட்டும். அவர்கள் நீடூழி வாழ வாழ்த்துவோம்.

மாயோ பவாய சதுஷ்பதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வாநயது புத்ரான் வின்தாவஹை பஹூம்ஸதே ஸந்து ஜரதஷ்டய:!!

உன் வாழ்க்கை புஷ்பங்களிலிருந்து வீசும் நறுமணம் போல மணம் வீசட்டும். மணமாலையில் கோர்க்கப்பட்ட பூக்கள் போல உன்னோடு இணைந்தும், குழைத்து வைத்த சந்தனத்தினைப் போல உன் அன்பால் நெகிழ்ந்தும் இருக்கிறேன்.

ஓம் பஞ்ச்சமே பஞ்ச்சபூதானாம், பஞ்ச்சப்ராணை: பராயணா:! தத்ர தர்ஷணிபுண்யானாம் சாக்ஷிண: ப்ராணபஞ்சதா:

அன்பே, இப்போது என்னோடு ஐந்தாம் அடியையும் எடுத்து வைத்து என் வாழ்வை சிறப்பானதாக்கினாய், அர்த்தமுள்ளதாக்கினாய். உனக்கு தெய்வத்தின் அருள் என்றும் இருக்கட்டும். நம் சந்ததிகள் நீடூழி வாழட்டும்.

ஓம் ப்ரஜாப்யாம் பஞ்சபதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வாநயது புத்ரான் வின்தாவஹை பஹூம்ஸதே ஸந்து ஜரதஷ்டய:!!

அன்பே நான் உனது துக்கங்களிலும் சந்தோஷங்களிலும் பங்கு கொள்கிறேன். உன் அளவில்லாத அன்பு கண்டு உன் மீது மதிப்பும் நம்பிக்கையும் கூடுகிறது. இந்த அன்பைப் பெற நான் எதுவும் செய்வேன்.

ஓம் ஷஷ்டே து ஷட்க்ருதூணாம் ச, ஷண்முக: ஸ்வாமிகார்த்திக: ! ஷட்ரஸா யத்ர ஜாயந்தே, கார்த்திகேயாஷ்ச சாக்ஷிண:!!

அன்பே! ஆறாம் அடியெடுத்து என்னோடு நடந்து என் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பினாய். நம் பந்தத்தால் நமக்கு மகிழ்ச்சியும் அமைதியும் என்றென்றும் விளையட்டும்.

க்ருதுப்ய: ஷட்ஷ்பதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வாநயது புத்ரான் வின்தாவஹை பஹூம்ஸதே ஸந்து ஜரதஷ்டய:!!

அன்பே! நீ தர்ம காரியங்கள் செய்யும் போதெல்லாம் நானும் அதில் பங்கேற்று உனக்கு துணையாயிருப்பேன். நம் குடும்பத்திற்கு தேவையான செல்வச் செழிப்புக்களை மிகுதியாக்க துணையிருப்பேன். தெய்வ காரியங்களிலும், நம் மகிழ்ச்சிக்காக நீ செய்யும் ஒவ்வொரு காரியங்களிலும் எப்போதும் துணையிருப்பேன்.

ஓம் சப்தமே ஸாகராஷ்சைவ ஸப்ததீபா: ஸபவர்த்தா:! ஏஷாம் ஸப்தஷிர்பதநீநாம் தேஷாமாதஷர்சாக்ஷிண:!!

அன்பே! இந்த ஏழாம் அடியோடு நம் பந்தம் பிரிக்கவியலாததாக பிணைந்தது. நம் அன்பும் நட்பும் தெய்வீகமானது. தெய்வமே ஏற்படுத்திய பந்தம்தான் இது. நீ முழுமையாக எனதானாய், நான் முழுமையாக உனதானேன். என் வாழ்க்கையை உன் கையில் ஒப்படைக்கிறேன். என் வாழ்க்கை போகும் திசையை நீயே தீர்மானிப்பாயாக.

ஸகே சப்தபதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வாநயது புத்ரான் வின்தாவஹை பஹூம்ஸதே ஸந்து ஜரதஷ்டய:!!

அன்பே! தெய்வத்தின் ஆணையாலும், புண்ணிய புத்தகங்களான வேதங்களில் குறித்த வண்ணமும் கர்மங்களைச் செய்து நாம் இணைந்தோம். நான் உனது மனைவியானேன். நாம் செய்த சத்தியப் பிரமாணங்கள் அனைத்துமே மனதால் செய்தவை. நாம் ஒருவருக்கொருவர் உண்மையாயிருப்போம். இந்தத் திருமணம் நம் வாழ்நாள் முடியும் வரை நீடித்திருக்கட்டும்.

மணமகன் மணப்பெண்ணிடம் கூறுவது

சோமஹ ப்ரதமோ விவேத கந்தர்வ விவிதே உத்ரஹ த்ருதியோ அக்னிஸடேபதிஸ துரியஸதே மனுஷ்ய ஜாஹ"

"முதலில் சோமன் (சந்திரன்) உன்னை பாதுகாத்தான், பின் கந்தர்வன் உன்னை பாதுகாத்தான், மூன்றாவதாக அக்னி உன்னை பாதுகாத்தான், நான்காவதாக மனிதனாகிய நான் உன் பாதுகாவலன் ஆகிறேன்"

#ஹோமம்

அதன்பின் ஹோமம் செய்யப்படும்போது சொல்லும் மந்திரங்கள்:

‘‘இதுவரை இவளைக் காத்தருளிய தேவர்களுக்கு வந்தனம். இந்தக் கன்னி தனது வீட்டிலிருந்து கணவன் வீடு புகுகிறாள். இளவயதுக்குரிய பிணிகளெதுவும் இவளிடம் இல்லாது போகட்டும்! தனது தந்தை வீட்டின் பந்தத்திலிருந்து விடுபட்டு தன் கணவன் வீட்டில் எல்லாரோடும் புதிய சொந்தம் ஏற்படுத்திக் கொள்ளட்டும்! இந்திரனே! இவளக்கு எல்லாப் பேறுகளும் இனிய குழந்தைகளையும் வழங்குவாயாக! இவளுக்கு 10 குழந்தைகளை வழங்கி என்னை 11வது குழந்தையாக்கி இவள் பேணி வளர்ப்பாளாக! சூரியனே, எங்கள் குழந்தைகள் எதுவும் அகால மரணம் அடையாதபடி காப்பாயாக. அக்கினியே, ஆபத்துகளிலிருந்து அவளைக் காப்பாயாக. அவளுக்கு நீண்ட ஆயுளைத் தருவீராக. மழலை பேசும் குழந்தைகளோடு கொஞ்சி விளையாடும் பேற்றை அவளுக்கு அருள்வீராக! ஓ, மணமகளே! உன் வீட்டில் என்றும் துயரமில்லாமல் போகவும், நீ கணவனையும் குழந்தைகளையும் ஒரு போதும் பிரியாமலிருக்கவும் அக்கினிக்கு இந்த ஆஹுதியை வழங்குகிறோம். எல்லாத் தேவர்களும் உன்னைக் காப்பார்களாக!’’’

#அம்மி_மிதித்தல்

மணமகளை அம்மியை மிதிக்கச் செய்து, மணமகன் சொல்வது:

‘‘இந்த அம்மியின் மீது ஏறி நிற்பாயாக! உன்னை எதிர்ப்பவர்களை வலிமையுடன் எதிர்கொள்வாயாக! அதே நேரத்தில் எதிரிகளுடன் கருணையுடனும் நடந்து கொள்வாயாக! ’’

#அருந்ததி_பார்த்தல்

சப்த ரிஷிகளிலே வசிஷ்டரின் மனைவியான அருந்ததி அண்டவெளியில் நட்சத்திரமாய் மின்னுகிறார். அந்த அன்னையின் அருள் பெற வேண்டி பார்க்கச் சொல்லும் ஐதீகத்தின் போது சொல்லப்படுவது- மணமகன்,

‘‘ஏழு முனிவர்களும் வசிட்டரின் மனைவியான அருந்ததியே சாலச் சிறந்தவள் என்று அறிவித்தார்கள். அதை மற்ற ஆறு மனைவியரும் ஏற்றுக் கொண்டார்கள். அதேபோல என் மனைவியும் கற்பில் தலைசிறந்தவள் என்று கருதப்பட்டு எட்டாவது தாரகையாய் மின்னட்டும்’’ என்று பிரார்த்திக்கிறான்.

#துருவ_நட்சத்திரம்_பார்த்தல்

இதன்பின் மணமக்கள் துருவ நட்சத்திரத்தைப் பார்க்கிறார்கள்.

‘‘ஓ துருவனே! உறுதியான இடத்தில் வசிக்கிறாய் நீ. உறுதியாக இருக்கிறாய். நீ உறுதியின் ஊற்று! வாழ்வில் உயிரின் உறுதிக்கு நீயே பொறுப்பு. நட்சத்திர மண்டலங்களின் அச்சாணி நீ. உறுதியைத் தாக்கும் எதிரிகளிடமிருந்து எம்மைக் காப்பாற்று!’’

#மணப்பெண்_கணவன்_வீடு_நுழைதல்
 
மணப்பெண் புதிய வீட்டுக்குள் நுழையும் கிருஹப்பிரவேச சடங்கின்போது சொல்லப்படும் மந்திரங்கள்:

‘‘கந்தர்வர்களும் அப்சரஸ்களும் இவள் மீது எல்லா நலன்களையும் பொழிவார்களாக! உனக்குப் புதிதான இந்த வீட்டில் நீ உன் கணவனோடு மகிழ்ச்சியாகவும் மக்கட் செல்வத்தோடும் வாழ்க. இந்த வீட்டில் உன் இல்லறக் கடமைகளில் கவனமாயிரு. உன் தலைவனான கணவனைத் தழுவியிரு. நீங்கள் இருவரும் ஒன்றாகவே வளர்ந்து, இந்த வீட்டின் நியதிகளுக்கேற்ப இதனை நிர்வகிப்பீராக. உன் கணவன் வீட்டின் ராணியாயிரு. உன் நன்னடத்தை மூலம் உன் மாமியார் ம்ற்றும் நாத்தனார்களின் அன்பை வென்று கொள்.’’

பின் மணமகள் சொல்வது:

‘‘வளம் செறிந்த, மங்கலகரமான, வீரர்களால் பாதுகாக்கப்பட்ட, மகிழ்ச்சிமயமான உறவினர்கள், மைத்துனர்கள், அவர்கள் குழந்தைகள் நிறைந்த இந்தப் புதிய வீட்டில் நான் எந்தவிதமான நடுக்கமுமின்றி நுழைகிறேன்!’

’ கிரஹப்பிரவேச ஹோமத்தில் மணமகன் சொல்லும் மந்திரம்:

‘‘என் மனைவி வந்து விட்டாள் பரிசுகளோடும், கால்நடைச் செல்வத்தோடும். நிரந்தரமான வேள்வி நீடிக்க, நல்ல குழந்தைகளை அக்கினி தேவன் இவளுக்கு அருள்வானாக!’’

பிறகு இறுதியாக #சேஷ_ஹோமம் செய்யப்படும். அப்போது மணமகன் சொல்லும் மந்திரம்:

‘‘அக்கினியே! வாயுவே! ஆதித்தனே! பிரஜாபதியே! உங்களைத் தொழுதால் குறைகளும் நிறைகளாய் மாறும். உங்களைச் சரண் புகுந்தேன். தயைகூர்ந்து என்னைக் காக்க வருவீராக. என் மனைவிக்குத் துயரமான வினையெதுவுமிருந்தால் அதைத் தீர்த்தருள்க! உள்ளிருந்து தொல்லை செய்யும் என் எதிரிகளை நீங்கள் தீர்த்துக் கட்டவே இந்த ஆஹுதியை அளிக்கிறேன்.’’

இந்த மந்திரத்தைத் தொடர்ந்து பெரியவர்களிடம் ஆசி பெறுகிறார்கள். திருமணச் சடங்குகள் இனிதே நிறைவடைய இல்லற வாழ்வினுள் அடியெடுத்து வைக்கிறார்கள்.

இதில் கூறப்படாத மேலும் சில சடங்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

#கும்ப_பூஜை, #புண்யாகவசனம்

கும்பத்தில் நீர் வைத்து மணமகன், மற்றும் மணமகள் இருவரும் கங்கை, யமுனை போன்ற ஸ்ப்த ஜீவ நதிகளை கும்பத்தில் எழுந்தருளச் செய்து புண்யாக வசனம் என்று சொல்லக் கூடிய வேத மந்திரங்கள் செய்து பூஜை செய்வர்.

#கங்கணம்_கட்டுதல் கங்கண தாரணம்

மணமகன், மணமகள் இருவருக்கும் திருமணத்தின் போது எந்த துஷ்ட சக்திகளும் அணுகா வண்ணமும், கண் திருஷ்டி போன்ற கோளாறுகள் ஏற்படா வண்ணமும் திருமணம் இனிது நடைபெறவும் தாய் மாமாவை வைத்து காப்பு கட்டுவர்.

#ஓதியிடுதல்

வேத மந்திரம் ஓதி, இறைவனை வணங்கி, புத்தாடைகளை மணமக்களுக்கு வழங்கிடும் வழக்கமாகும்.

#காசி_யாத்திரை

மணமகன் பாரம்பரிய முறைப்படி திருமண உடை அணிந்து கொண்டு தனது கல்வி அறிவை மேலும் விருத்தி செய்து கொள்வதற்காக கல்விக் கூடங்கள் நிறைந்த காசி (வாரணாசி) போன்ற தலங்களுக்கு செல்வதாகவும், அப்போது அவரை மணமகளின் சகோதரர் இடைமறித்து இல்லறத்தின் மாண்பினை எடுத்துரைத்து மணப்பந்தலுக்கு, தங்கள் வீட்டு பெண்ணை திருமணம் செய்து தருவதாகச் சொல்லி, அழைத்து வருதல். இந்நிகழ்ச்சியில் மைத்துனர் மணமகனுக்கு கால் விரலில் மெட்டி அணிவிப்பார்.

#கௌரி_பூஜை, #விளக்கு_பூஜை

மணமகள் திருவிளக்கில் கௌரி அம்பிகையை எழுந்தருளச் செய்து திருவிளக்கு பூஜை செய்வாள். கௌரி அம்பிகை சிவ பெருமானை வேண்டி தவம் இருந்து அவரை அடைந்தார். அதே போன்ற நல்வரன் அமைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்த மணப்பெண்ணுக்கு நல்ல வரன் அமைந்ததால் நன்றி செலுத்தும் பொருட்டு கௌரி பூஜை செய்தலாகும்.

#பாலிகை_பூஜை

அங்குரார்ப்பணம் என்று சொல்லக் கூடியது, பாலிகை பூஜை செய்தல் ஆகும். மண் கலயங்களில் வளமான உரமிட்ட மண்ணைப் பரப்பி அதில் முளைக்கும் திறனுள்ள பயறு வகைகளை முளைக்க வைத்து அதில் சுமங்கலி பெண்கள் பால் கலந்த நீரைத் தெளிப்பர். விதையானது எவ்வாறு முளைத்து வெளிவருகிறதோ, அதே போன்று வம்சம் விருத்தியடைய பிரார்த்தனை செய்வர்.

#அரசாணி_கால்_நடுதல்

அரச மரத்தின் வேரில் பிரம்ம தேவனும், அடியில் திருமாலும், நுனியில் சிவமூர்த்தியும் உள்ளதால் சுமங்கலிகள் அரச மரத்தின் கிளையைப் பாலும் பன்னீரும் விட்டு, பூசித்து மும்மூர்த்திகளை அங்கு எழுந்தருளச் செய்கின்றனர்.

#சம்மந்தி_மரியாதை

மணமகன், மணமகள் இருவரின் தந்தை மற்றும் தாயார் ஒருவருக்கொருவர் சம்மந்திகள் மரியாதை செய்து கொள்வர்.

#மாலை_மாற்றுதல்

மணமகன், மணமகள் இருவரும் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொள்ளுதல், மாலை மாற்றுதலின் பொருள் இருமனம் கலந்து ஒரு மனமாகி இல்வாழ்க்கையை ஆரம்பித்தல் ஆகும்.

#கரம்_பிடித்தல்

“நீயும் நானும் முதுமையடைந்து விட்டாலும் கூட, ஒருவரை ஒருவர் பிரியாதிருப்போம் என்று கரத்தைப் பிடிக்கிறேன்!” என்று கூறி, மணமகன் மணமகளின் கரம் பிடிக்க வேண்டும்.

(ஆணின் வலக்கை பெண்ணின் வலக்கையைப் பிடித்தல் வேண்டும். பின்பு ஏழடி எடுத்து வைத்து அம்மி மிதித்து அக்கினியை வலம் வருவார்கள். வலம் வரும்போது தோழனும் தோழியும் சேர்ந்து வருவார்கள். பஞ்ச பூதங்களின் சாட்சியாக கையைப் பிடிப்பதாகப் பொருள்.)

#பொரி_இடுதல்

மணமக்கள் கிழக்கு நோக்கி நிற்க,மணமகனின் சகோதரன் நெற்பொரியை குருக்களிடம் இருந்து பெற்று மணமகனின் கையில் கொடுக்க, மணமகன் மணமகளின் கையில் கொடுத்து மணமகளின் கைகளை தன் கைகளால் தாங்கி அக்கினி பகவானே சகல செல்வங்களையும் எமக்குத் தந்தருள வேண்டும் என வேண்டிக் கொண்டு ஹோம குண்டத்தில் இடுவார்கள். நெல், பொரியாக மலர்வது போல் நம் வாழ்வு மலர வேண்டும் என்பதே தத்துவமாகும்.

#கோ_தரிசனம்

இல்லற வாழ்வு தொடங்கும் மணமக்கள் வாழ்விற்கு வேண்டிய அஷ்ட ஐஸ்வரியங்களையும் வேண்டி, பசுவை இலட்சுமி தேவியாக வணங்குவர்.

#நலங்கு

நலங்கு என்பது மணமக்களுக்கிடையே அன்யோன்யத்தை வளர்த்திடும் பொருட்டு விளையாட்டு விளையாட வைத்தல் ஆகும். மணமக்களை ஊஞ்சலில் வைத்து ஆட்டுதல், மலர்ப்பந்து உருட்டுதல், அப்பளம் உடைத்தல், மஞ்சள் நீர் நிறைந்த குடத்தில் உள்ள கணையாழியை தேடி எடுத்தல் போன்றவை, அதற்குரிய வாய்பாட்டுடன் நடத்தப்படும்.

#மடிமாற்றுதல்

திருமாங்கல்ய தரிசனத்திற்கு முன்பும், அதற்கு பின்பும் மணமகள் மற்றும் மணமகனின் சகோதரி, மங்கல பொருட்கள் (மஞ்சள், தேங்காய், மலர், குங்குமம், பனை வெல்லம்) அடங்கிய சிறு முடிச்சினை சேலையின் மடி விரித்து பெற்று மாற்றிக் கொள்வார்கள்.

அட்சதை (அட்சதாரோபணம்)

அறுகரிசி என்பது முனை முறியாக பச்ச‌ரிசி. அருகம்புல், மஞ்சள் கலந்த கலவையே ஆகும். பெரியோர் இரண்டு கைகளாலும் எடுத்து வாழ்த்தி உச்சியில் மூன்று முறை இடுவர்.

நிறைவு

மணமக்களின் கைகளில் கட்டப்பட்ட காப்புகளை அவிழ்த்து பவித்திரங்களை கழற்றி அவற்றுடன் பெற்றோரின் பவித்திரங்களையும் சேர்த்து வெற்றிலையில் வைத்து குருக்களின் தட்சணையும் சேர்த்து குருக்களிடம் கொடுப்பர்.

ஆரத்தி

மணமக்கள் தரப்பில் இருந்து இரு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பார்கள். தம்பதிகளுக்கு தீய சக்தியினால் தீமை ஏற்படாமலும் கண் திருஷ்டி நீங்கும் பொருட்டும் இவை செய்யப்படுகின்றன. பிறகு விருந்து உபச்சாரமும் நடைபெறும் 

பின்குறிப்பு; இதுவரையில் கூறப்பட்ட சடங்குகள் தவிர மேலும் சில சடங்குகள் உள்ளன.அவை சாதிக்குசாதி மாறுபடும். 

 அனைத்து இந்துக்களுக்கும் பொதுவான இந்து திருமண சடங்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

ஜாதகம் பார்த்தல்
பெண் பார்த்தல்
 நிச்சயதார்த்தம்
 பரிசம் போடுதல்
நலங்கு செய்தல்
 தாலிசெய்தல் / பொன்னுருக்கல்
 மங்கலப் பொருட்கள் வாங்குதல்
முகூர்த்தக் கால் நடுதல்
முளைப்பாலிகை இடுதல்
பந்தல் அமைத்தல்
 மணமகள் / மணமகன் அழைப்பு
 காசி யாத்திரை
 குடஜீராரோஹணம்
 தேவதா பிரஸ்தம்
 கங்கண தாரணம்
 நாந்தி – சிரார்த்தம் செய்தல்
பிரம்மோபதேசம்
 சகல தேவதா பூஜை
கன்யாதானம்
 மாங்கல்ய தாரணம்
 மாலை மாற்றுதல்
 பாணிக்கிரகணம்
 ஏழடி நடத்தல்
அம்மி மிதித்தல்
அருந்ததி பார்த்தல்
அட்சதாரோபணம்
சுஹாசினி தானம்
 கங்கணம் அவிழ்த்தல்
 தாம்பூலம் அளித்தல்

இந்து மதத்தில் உள்ள அத்தனைச் சடங்குகளுமே தத்துவம் சார்ந்தவை ஆகும்.

  இந்து திருமணம் என்பது இல்லற வாழ்வின் மகத்துவத்தையும், அதன் பொருளையும், அதன் நோக்கம், அதன் பயன் போன்ற அனைத்தையும் எடுத்துச் சொல்லும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட பல சம்பிரதாயங்களைக் கொண்டது ஆகும்.

இந்து திருமண சடங்குகள் என்பவை மூட நம்பிக்கைகள் அல்ல. அவை வாழும் நெறிகளாகும். இல்லற வாழ்வின் கடமைகளை, உரிமைகளை விளக்கும் ஒரு அறிமுகப் பாடம் ஆகும்.

மகிழ்வான மனதுடன் இல்லறம் ஆரம்பித்தால் மணமக்களுக்கு இடையே எளிதில் புரிதல் ஏற்பட்டு பிணைப்பு உண்டாகும். ஆகவே மனதைப் பக்குவப்படுத்தி, இன்பமாக, நேரியல் நோக்கோடு வைப்பதும், இல்லறத்தின் தத்துவங்களைப் புரிய வைப்பதுவுமே இந்துதிருமணச் சடங்குகளின் முக்கிய நோக்கமாகும்.வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே என்றும் அன்புடன் உங்கள் ஆச்சார்யா பாபாஜி
லோகா சமஸ்தா சுகினோ பவந்து
தர்மோ ரக்ஷக்தி இதி ரக்க்ஷிதஹா

1 comment: