ஆறுமுக சுவாமிகள்
கோட்டையூர் எச்சில் பொறுக்கி ஆறுமுக சுவாமிகள்ஆறுமுக சுவாமிகள்
பொதுவாக
ஒருவரின் கர்மவினைகளை இன்னொருவர் வாங்கிக் கொள்ள முடியாது. அவரவரது
கர்மவினையை அவரவர்கள்தான் அனுபவிக்க வேண்டும் என்றுதான் சாஸ்திரங்கள்
சொல்கின்றன. ஆனாலும், பிறரது கர்மவினைகளை வாங்கிக் கொள்ளும் இத்தகைய சக்தி
படைத்த மகான்கள் இருக்கத்தான் செய்தார்கள்; இன்றும் நம் குறிப்பிடத்தக்க
ஒருவர்தான்-எச்சில் பொறுக்கி ஸ்ரீஆறுமுக சுவாமிகள் எச்சிக்கலை சுவாமிகள்,
கர்மவினைச் சித்தர், எச்சிக்கலையும் பொறுக்கும் சுவாமிகள் (அதாவது
பக்தர்களுக்கு எந்த விதமான சிக்கல் இருந்தாலும், அதைத் தானே வாங்கிக்
கொண்டு பொறுத்து ஆள்பவர்) என்றெல்லாம் இவரை அழைப்பார்கள். அழுக்கான காவி
வேஷ்டியே இவரது ஆடை முழங்கால் வரைக்குமான ஒரு சட்டை அணிந்திருப்பார்.
பார்ப்பதற்குப் பரதேசி போல் தோற்றமளிக்கும் இவருக்கு அடர்ந்து வளர்ந்த
தாடி, சடைமுடி இவர் ஜீவ சமாதி ஆகி. 28 வருடங்கள் ஆகின்றன.
திருச்சி -
மதுரை சாலையில் திருச்சிக்கு அடுத்து வருவது விராலிமலை இங்குதான் ஆறுமுக
சுவாமிகளின் காலம் கழிந்தது. ஜீவ சமாதி ஆனது காரைக்குடிக்கு அருகே உள்ள
கோட்டையூரில். ஒரு வைகாசி விசாகத்தன்று சுவாமிகள் சமாதி ஆனார். வைகாசி
மாதம் விசாகத்தன்று தான் முக்தி அடைந்து விடுவேன் என்கிற தகவலை சுவாமிகள்
தன் சீடர்களிடம் முன்னமேயே சொல்லி இருந்தார். சுவாமிகள் ஜீவ சமாதிஆகும்
நாள் பற்றிக் குறிப்பு. பல ஓலைச் சுவடிகளில் இருந்ததாகவும் பிரமிப்பூட்டும்
தகவலைச் சொல்கிறார்கள் அவரது பக்தர்கள்.
விராலிமலையில் முருகப்
பெருமான் குடி கொண்ட மலையில் - தெற்குமலை அடிவாரத்தில் ஒரு குகையில் பல
காலம் வசித்து வந்தார் ஆறுமுக சுவாமிகள். குகையில் வேல் வடிவத்தை பிரதிஷ்டை
செய்து அங்கேயே வாழ்ந்தார். பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் இவரைத் தேடி
வந்தார்கள். சுவாமிகளின் எட்டு வயதிலேயே மூதேவி (வாராஹி என்றும்
சொல்கிறார்கள்) அவரது உடலில் குடி கொண்டாளாம். இத்தகையோருக்கு வாக்குப்
பலிக்கும். செயல்பாடுகள் முரட்டுத்தனமாக இருக்கும். யாராவது இலையில்
சாப்பாட்டைக் கொடுத்தால், சாப்பிட்டு முடித்து விட்டு, அந்த இலையைப்
பத்திரமாக மடித்து ஒரு மூலையில் வைப்பாராம். தூர எறிய மாட்டார். சில
நேரங்களில் தான் இருக்கும் குகைக்குள்ளேயே சாப்பாட்டை வாரி இறைப்பாராம்.
இப்படி எச்சில் இலையை மடித்து வைத்துப் பத்திரப்படுத்துகிறாரே என்று இதைப்
பார்க்க நேரிடும் அவரது பக்தர்கள் சிலர் சில நேரங்களில் முகம்
சுளிப்பார்களாம்.
எச்சில் என்பது அசூயைப்படக் கூடிய ஒரு விஷயம்
அல்ல. அசுத்தம் அல்ல. மனிதர்களின் மனதில்தான் வேறுபாடு வேரூன்றி
இருக்கிறது. என்பதை சுவாமிகள் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார்.
இதனால்தான் ஆறுமுக சுவாமிகள் எச்சில் பொறுக்கி சுõவமிகள் ஆனார்.
கர்மவினைகளை வாங்கிக் கொள்ளும் சக்தி படைத்த மகான் ஒருவர் விராலிமலையில்
வசித்து வருகிறார் என்கிற தகவல் வெளியூர் பக்தர்களுக்கு எப்படி தெரிந்தது?
சுவாமிகளின்
நெடுநாளைய பக்தர் ஒருவர் சொன்னது; கர்மவினையால் நான் பெருமளவு
பாதிக்கப்பட்டிருந்தேன். எத்தனையோ ஜோசியரிடம் போனேன். பரிகாரங்கள்
சொன்னார்கள். எல்லாவற்றையும் செய்தேன். பலன் இல்லை. கடைசியில் நாடி ஜோதிடர்
ஒருவரிடம் போனேன். அவர் சில ஓலைச் சுவடிகளைப் பார்த்து விட்டு,
கர்மவினைகளைப் போகக்கக்கூடிய சித்தர் ஒருவர் விராலிமலையில் இருப்பதாக ஓலை
சொல்கிறது. அங்கே போய் அவரைத் தேடிக் கண்டுபிடித்து உங்கள் பூர்வ வினைகளைப்
போக்கிக் கொள்ளுங்கள் என்றார். அதன்படி குடும்பத்தினருடன் விராலிமலைக்குப்
பயணமானேன். ஆறுமுக சுவாமிகளையும் அங்கே தேடிக் கண்டுபிடித்து. என்
கர்மவினைகளை அவர் வாங்கிக் கொண்டார். அதன் பிறகு என் வாழ்க்கை பிரகாசமடையத்
தொடங்கியது.
இன்னொரு பக்தரின் கர்மவினைகளை சுவாமிகள் வாங்கிக்
கொண்டிருந்தபோது. திடீரென அவரது ஒரு காதில் இருந்து சீழ் வழிந்தது. நான்
உட்பட உடன் இருந்த பக்தர்கள் அனைவரும் பதறிப் போய் விட்டோம். பிறகுதான்
சுவாமிகள் சிரித்தப்படியே சொன்னார்; இது அவனது கர்மவினை எனக்கு வந்து
விட்டதல்லவா.... அதான் சீழ் ரூபத்தில் வெளியேறுகிறது. இதுதான் இவரது மகிமை.
சுவாமிகள் இருக்கும்போது மட்டும்தான் என்றில்லை.... இன்றும் அவரது ஜீவ
சமாதி தேடி கோட்டையூருக்கு வரும் பக்தர்களின் கர்மவினைகளை வாங்கிக் கொண்டு
அருள் புரிந்து வருகிறார். இவரது சன்னிதியில் மனமுருகிப் பிரார்த்திக்கும்
எந்த ஒரு பக்தரின் கோரிக்கையையும் சுவாமிகள் கைவிடுவதில்லை.
கர்மவினைச்
சித்தர் என்று எல்லா பக்தர்களாலும் அழைக்கப்படும் இவர். தான் வாழ்ந்த
காலத்தில் தன்னைத் தேடி வந்த பக்தர்களின் கர்மவினைகளைத் தானே வாங்கிக்
கொண்டார். இதற்கென இவர் வசித்த விராலிமலைக்குப் பல பக்தர்கள் அன்றாடம் தேடி
வருவது வாடிக்கை. சில பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, அவ்வப்போது சுவாமிகள்
வெளியூர்களுக்கும் பயணப்படுவதுண்டு. அப்படி சிதம்பரம், திருச்சி, சென்னை,
தஞ்சாவூர் போன்ற ஊர்களுக்குச் சென்றிருக்கிறார். சுவாமிகளின் முன்னிலையில்
தங்கள் வீட்டில் ஹோமம் போன்ற சுப நிகழ்வுகளை நடத்துவதற்காகப் பக்தர்களே
வாகனத்தை ஏற்பாடு செய்து கூட்டிப் போவார்கள்.
கர்மவினைகளைப்
போக்குவது ஒரு பக்கம் என்றாலும். இத்தகைய சித்த புருஷரின் ஆசியைப்
பெறுவதற்காக சாதாரண பக்தர்களும் விராலிமலைக்கு வந்து செல்வது வழக்கம்.
சுவாமிகளுக்கு சாப்பாடு டீ ஏதாவது வாங்கித் தந்து விட்டு, அவரது உபதேச
மொழிகளைக் கேட்டுச் செல்வார்கள் பல பக்தர்கள். அப்படித்தான் கோட்டையூர்
நகரத்தார் அன்பரான ஏஎல். சிதம்பரமும் சுவாமிகளுக்கு பழக்கமானார்.
சுவாமிகளின் அன்புக்கும் அருளுக்கும் பாத்திரமானார் இவர். இவர்தான் தற்போது
சுவாமிகளின் ஜீவ சமாதிக் திருப்பணிகளைக் கவனித்துக் கொண்ட வருகிறார்.
சுவாமிகளிடம்
ரொம்ப ஜாக்கிரதையாகப் பழக வேண்டும். வாராஹி அவரிடம் குடி கொண்டிருப்பதால்,
அவர் சொல்லும் எந்த வாக்கும் பலிக்கும். எனவே, ரொம்பவும் ஏடாகூடமான
ஆசாமிகள் சுவாமிகளிடம் நெருங்க மாட்டார்கள். அவர்பாட்டுக்கு ஏதாவது சொல்லப்
போய், இருக்கக் கூடிய வாழ்க்கையும் பாழாகிப் போய் விடுமோ என்ற அச்சம்தான்
இதற்குக் காரணம். சுவாமிகளுக்குத் தெரியும் - எவருக்கு எத்தகைய வாக்கு
கொடுக்க வேண்டும் என்று அஞ்ஞானிகளுக்கு இது புரியாது. சுவாமிகளிடம் பல
காலம் பழகக் கூடிய பாக்கியம் எனக்குக் கிடைத்ததை அவரது திருவருள் என்றுதான்
சொல்ல வேண்டும். விராலிமலையில் பல முறை சந்தித்து உரையாடி உள்ளேன்.
கோட்டையூரில் உள்ள என் வீட்டுக்கும் ஓரிரு முறை வந்து உணவு அருந்தி
இருக்கிறார். சுவாமிகளின் ஆசிதான் என்னை இன்றளவுக்கு சுமுகமாக வாழ வைத்துக்
கொண்டிருக்கிறது. பொணம் எரியுது. இப்பதான் நெஞ்சுக்கறி தின்னுட்டு வந்தேன்
என்பார் சுவாமிகள் சில வேளைகளில் இதெல்லாம் வாராஹியின் கொடூரமான சொரூபம்.
தான்
சமாதி ஆகப் போகும் தினத்தை முன்கூட்டியே சொல்லி இருந்தார் சுவாமிகள்.
18.5.81. வைகாசி மாதம் விசாக நட்சத்திரம். திங்கட்கிழமை. சுவடிகளில் சொல்லி
இருந்தபடியும் சுவாமிகள் அறிவித்திருந்தபடியும் அவர் அன்றைய தினம் சமாதி
ஆகி விட்டார். கோட்டையூரில் இந்த திசையில் ஒன்பது அடி ஆழத்தில் ஒரு குழி
உள்ளது. என் ஜீவன் அடங்கியதும் அங்கே கொண்டு போய் சமாதி வையுங்கள். நான்
சமாதி கொண்ட இடத்தைச் சுற்றி பின்னாளில் ஒரு நகர் தோன்றும். காடு நாடாகும்
என்று ஏற்கெனவே சுவாமிகள் கூறி இருந்தபடி, அவரை ஒரு டாக்ஸியில் வைத்து
விராலிமலையில் இருந்து, கோட்டையூர் கொண்டு வந்தோம். சுவாமிகள் சொன்ன
குறிப்பின்படி - அவர் சொன்ன திசையில் - சொன்ன இடத்தில்- சொன்ன ஆழத்தில் ஒரு
குழி இருந்தது. அங்கேயே சமாதி வைத்தோம் என்றார்.
சாதுக்களை
அடக்கம் செய்யும் முறைப்படி விபூதி, வில்வம், புஷ்பம் போன்றவற்றை இட்டு
அவரது சமாதியை நிரப்பினார்கள். திருவண்ணாமலையில் இருந்து ஒரு லிங்கத்
திருமேனி கொண்டு வந்து, சுவாமிகளின் சமாதியின் மேல் பிரதிஷ்டை ஆனது.
உத்ஸவர் திருமேனியும் உள்ளது. சுவாமிகளின் அருளாட்சி தினமும் இங்கே நடந்து
கொண்டிருக்கிறது. குழந்தைபேறு, திருமணத்தடை, போன்ற பல குறைகளை சுவாமிகளின்
சன்னிதியில் கொட்டி விட்டுச் செல்கிறார்கள். அனைத்து பிரார்த்தனைகளும்.
இங்கே நிறைவேறுகிறது.
சுவாமிகளின் ஜீவ சமாதிக்கு மதில்சுவர், தியான
மண்டபம். கீழ்ப் புற மண்டபம் மேற்புற மண்டபம் கட்டி 23.5.94. அன்று
பதின்மூன்றாவது குருபூஜையும், முதல் கும்பாபிஷேகமும் நடந்தேறியது.
22.5.2005-ல் இரண்டாவது கும்பாபிஷேகம் நடந்தது. ஒவ்வொரு வருடமும் வைகாசி
மாதம் விசாக நட்சத்திரமும் பவுர்ணமி திதியும் கூடிய நன்னாளில் குருபூஜை
சிறப்பாக நடந்து வருகிறது. குருபூஜையின்போது நாட்டின் பல பகுதிகளில்
இருந்து சாதுக்கள் வந்து திரள்கிறார்கள்.
தினமும் இரு கால பூஜை
நடக்கிறது. கும்பம் வைத்து ருத்ர ஜபம் சொல்லி அபிஷேகம் செய்யப்படுகிறது.
தவிர, வாரம்தோறும் வியாழக்கிழமை அன்று இரவில் சுவாமிகளுக்கு விசேஷ அபிஷேகம்
மற்றும் ஆராதனை நடக்கிறது. அமாவாசை அன்று மதியம் அபிஷேகம் மற்றும்
அன்னதானமும் பவுர்ணமி அன்று இரவு அபிஷேகமும் மதியமும் அன்னதானமும்
நடக்கிறது. பல பக்தர்கள் ஓரிரவு இங்கு தங்கி, சுவாமிகளின் ஆசியை பெற்றுச்
செல்வதை விரும்புகிறார்கள்.
பூர்வ ஜன்மத்தில் கொஞ்சம் ஒட்டிக்
கொண்டிருக்கும் புண்ணிய பலத்தால் மட்டுமே இவரது ஜீவ சமாதியைத் தரிசிக்கும்
பாக்கியம் கிடைக்கும். பிற ஊர்களில் இருந்து வரும் சாதுக்களுக்கு இங்கே
சிறப்பு மரியாதை செய்யப்படுகிறது. சுவாமிகளுக்கு பல இளைஞர்கள் சீடராக
இருந்தார்கள். எனவே, ஆன்மிகத்தின் வலிமையையும், இறை பக்தியின் சிறப்பையும்
அவர்கள் மனதில் புகுத்துவதற்காக ஆறுமுகம் தன்னை அறி தியான மையம் ஒன்றைக்
தொடங்கி இருக்கிறார் ஏஎல். சிதம்பரம். பக்தியைத் தவிர, பண்பாடு தொடர்பான பல
விஷயங்களையும் இளைஞர்களுக்கு போதிப்பதற்காகத்தான் இந்த மையம்.
கர்மவினையால்
அவதிப்படுபவர்கள்தான் இந்தக் கலியுகத்தில் அதிகம். இறை அருளால் ஏராளம்
சாதித்த எச்சில் பொறுக்கி ஆறுமுக சுவாமிகளின் திருச்சன்னிதியைத் தேடி
செல்லுங்கள். உங்கள் குறைகளைக் கொட்டுங்கள். அவரது திருவடி தரிசனம்.
உங்களைத் திடப்படுத்தும், நம்பினோரைக் கைவிட மாட்டார் ஆறுமுக சுவாமிகள்!
தகவல் பலகை
தலம் : கோட்டையூர்.
சிறப்பு : எச்சில் பொறுக்கி ஆறுமுக சுவாமிகளின் ஜீவ சமாதி.
எங்கே
இருக்கிறது?: காரைக்குடியில் இருந்து திருச்சி செல்லும் வழியில்
காரைக்குடியில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் இருக்கிறது கோட்டையூர்
திருச்சியில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவு. கோட்டையூர் மெயின் ரோட்டில்
இருந்து சுமார் ஒண்ணரை கி.மீ. தொலைவு உள்ளே சென்றால் சுவாமிகளின் ஜீவ
சமாதி.
எப்படிப் போவது? திருச்சி-காரைக்குடி சாலையில் பேருந்துகளில்
பயணித்தால் கோட்டையூரில் இறங்கிக் கொள்ள வேண்டும். இந்த சாலையில்
பயணிக்கும் சில பேருந்துகள் கோட்டையூர் நிறுத்தம் வழியாக வராமல் பைபாஸ்
சாலையில் செல்லும். அத்தகைய பேருந்துகள் என்றால், கோட்டையூர் ஸ்ரீராம் நகர்
என்று கேட்டு இறங்கிக் கொள்ள வேண்டும். பட்டுக்கோட்டை, அறந்தாங்கி போன்ற
பல ஊர்களில் இருந்தும் கோட்டையூருக்குப் பேருந்து வசதி உண்டு. கோட்டையூர்
மெயின் ரோட்டில் இருந்து ஜீவ சமாதிக்கு ஆட்டோ வசதி இருக்கிறது.
தொடர்புக்கு: ஏஎல். சிதம்பரம் 37, வெங்கடாசலம் செட்டியார் தெரு.
கோட்டையூர் - 630 106.
(காரைக்குடி அருகே)
போன்: 04565-286587
நன்றி: திருவடி சரணம்
அகத்தியர் ஞானம்.