Friday, December 7, 2018

யோகம் வியோகம்


மஹாபெரியவா அருளுரை


தெய்வத்தின் குரல்

யோகம் என்றால் சுவாசத்தை அடக்கி அடக்கியே சிலை மாதிரி உட்கார்ந்திருப்பதுதான் என்று பொதுவாக நினைக்கிறார்கள். ‘யோகம்’ என்பதற்கு நேர் அர்த்தம் சேர்க்கை என்பது. பல வஸ்துக்களோடு நாம் வாழ்க்கையில் சேர வேண்டியதாகிறது. ஆனால் இந்தச் சேர்க்கை எதுவும் நிரந்தமாக இருக்கவில்லை. அதனால்தான் மனசு கிடந்து ஆடிக்கொண்டேயிருக்கிறது. இப்படியில்லாமல் முடிந்த முடிவான ஒரே வஸ்துவுடன் எந்தநாளும் சேர்ந்துவிட்டோம், அதற்கப்புறம் நாம் என்று ஒன்று, அதிலிருந்து பிரிந்து வரவே முடியாது என்று ஆக்கிக் கொண்டுவிட்டால், அதுதான் நிஜமான யோகம். நம் மனசுகளுக்கெல்லாம் மூலமாக இருக்கிற பரமாத்மாதான் அந்த ஒன்று. மனசை மூலத்தில் திருப்புவதற்காகவே யோகிகள் சுவாசத்தை அடக்குகிறார்கள்! ஏனென்றால் எண்ணம் உதிக்கிற வேர் எதுவோ, அதுவேதான் சுவாசத்தின் வேரும் ஆகும். எனவே சுவாசம் மூலத்தில் நின்றால் மனமும் அதன் மூலத்துக்குப் போய் அடங்கிவிடுகிறது.

யோகம் என்பதற்கு எதிர்ப்பதம் ‘வியோகம்’. விட்டுப் போவதை ‘வியோகம்’ என்கிறோம். உடம்பைவிட்டு ஒருவர் செத்துப் போய் விட்டால் ‘தேக வியோகம் ஆகிவிட்டார்’ என்று சொல்கிறோம் அல்லவா?

ஒரு தினுசான வியோகம் வந்துவிட்டால் அதுவே யோகம் ஆகிவிடும் என்று பகவான் கீதையில் சொல்கிறார். ஏதோ ஒன்றில் வியோகம் வந்தால் — அதாவது, எதுவோ ஒன்றை விட்டுவிட்டால் அதுவே யோகம் என்கிறார். அந்த ஒன்று என்ன? துக்கம் என்பதே. துக்கம் உன்னிடம் ஒட்டாமல் பிரித்துத் தள்ளிவிட்டால் அதுவே யோகம் என்கிறார். (தம் வித்யாத் து:க ஸம்யோக வியோகம் யோக ஸமஞிதம்.)

லோக ரீதியில் நாம் சொல்கிற ‘இன்பங்களும்’ கூட இந்தத் துக்கத்தைச் சேர்ந்தனவே. பரமாத்மாவைப் பிரிந்திருக்கிற எல்லா அநுபவமுமே துக்கம்தான்.

No comments:

Post a Comment