Friday, December 7, 2018

தடுத்தாட்கொண்ட நாயகி ஸமேத தான்தோற்றீஸ்வரர் கோயில் - பெரும்பேர்கண்டிகை

கோடி நன்மை தரும் கோமடி சங்கு , தடுத்தாட்கொண்ட நாயகி ஸமேத தான்தோற்றீஸ்வரர் கோயில் - பெரும்பேர்கண்டிகை...

கோமடி சங்கு உள்ள கோவில் ..... கோமடி சங்கை  பசு மடியின் கீழ் கொண்டு வைத்தால் பசு தானாக பால் கரக்கும் அதிசயம் நிகழும் அற்புத சிவத்தலம்....

சங்கு வகைகளில் மிக உயர்ந்தது கோமடி சங்காகும். ஒரு லட்சம் வலம்புரி சங்குகள் தோன்றும் போது ஒரே ஒரு சங்கு ஒன்றாக கோமடி சங்காக கிடைக்கும். பசு (கோ) மடி போல இருப்பதால் அந்த சங்குக்கு அந்த பெயர் வந்தது. இத்தலத்தில் காண்பதற்கரிய கோமடி சங்கு இருக்கிறது. ஒரு கோடி சங்கில் ஒரு சங்குதான் வலம்புரிச் சங்காகக் கிடைக்கும். அப்படி ஒரு கோடி வலம்புரிச் சங்கில் ஒரு சங்கே கோமடி சங்காக அமையுமாம். அம்பாளே இந்த அபிஷேகத்தை, சிவனுக்கு செய்வதாக ஐதீகம். தெட்சிணாமூர்த்தியின் சீடர்களான சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமார் ஆகிய நால்வரும் நந்தி வடிவில் சிவனின் திருமணக்காட்சியை இங்கிருந்து கண்டதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

கோமடி சங்கால் ஈசனுக்கு செய்யும் அபிஷேகமானது, பசு மடியில் இருந்து நேரடியாக சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகமாக கருதப்படுகிறது. மேல்மருவத்தூர் அருகே உள்ள கண்டிகையில் உறைந்துள்ள தான் தோன்றீஸ்வரருக்கு தினமும் கோமடி சங்கில் அபிஷேகம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
கயிலையில் பரமேஸ்வரனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது, கூடிய கூட்டத்தால் உலகம் சமநிலை இழந்தது.

அதனை சமப்படுத்த அகத்தியரை அனுப்பினார் ஈசன்.

திருமண வைபவத்தைக் காணும் பாக்கியம் தனக்கு இல்லையே என்று அகத்தியர் நினைக்க, அவருக்கு விருப்பமான இடத்திலெல்லாம் மணக்கோலம் காட்டியருள்வதாகச் சொன்னார் மகேசன். 

பூவுலகம் வந்து உலகை சமநிலைப்படுத்தியதும் அகத்தியர் ஒவ்வொரு தலமாக இறைவனை தரிசித்துக் கொண்டும், சில இடங்களில் தவத்தை மேற்கொண்டும் வந்தார். அப்படியொரு நாள், மலைமீது அமர்ந்து அருள்பாலிக்கும் குமரக் கடவுளை தரிசிக்க வருகிறார். அவருக்கு முருகன் வள்ளி, தெய்வானை சமேதராகவும், ஞானத்தைப் போதிக்கும் தட்சிணாமூர்த்தி அம்சமாகவும் தெற்கு நோக்கி காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். பெரும்பேறு கண்டிகை என்ற அழகிய கிராமத்தில் அமைந்திருக்கும் சிறிய மலைக்குன்றின் மீது அமர்ந்திருக்கும் முருகப்பெருமான் தலமே அது. 

பின்பு அகத்தியர் அங்கிருந்து மேற்குப் புறத்தில் சுயம்பு மூர்த்தமாக, மணல் லிங்கத்தில் அமைந்திருக்கும் தான்தோன்றீஸ்வரரை தரிசித்து, அத்தலத்துக்கு அருகிலேயே தவத்தை மேற்கொள்கிறார். அப்படி அவர் தவம் செய்து கொண்டிருக்கும் நாளில், சித்ரா பௌர்ணமி தினம் வருகிறது. அப்போது தான்தோன்றீஸ்வர பெருமானை, இன்று இங்கு தங்களின் திருமணக் கோலத்தை காண்பித்தருள வேண்டும் என வேண்டுகிறார்.

உடனே உமாமகேஸ்வரன் தனது திருமணக்கோலத்தைக் காண்பித்து அருள்பாலிக்கிறார். இப்படி இறைவன் அகத்தியருக்குக் காட்சி தந்த தலம்தான், தடுத்தாட்கொண்ட நாயகி உடனுறை தான்தோன்றீசுவரர் திருத்தலமாகும்.

இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக மணல்லிங்க வடிவில் ஆரம்பத்தில் இருந்து வந்தார். அபிஷேகம் செய்ய வசதியாக செப்புக் கவசம் அணிவிக்க இறைவன் இசைந்து அருள்புரிந்தாராம். அதன்படி தற்போது லிங்கத்தின் மீது செப்புக் கவசம் மாட்டப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

சுவாமி சுயம்பு  5000 வருடத்திற்கு மேல் பழமையான கோயில். 5300 வருடம் பழமையானது என்று காஞ்சி சங்கர மடம் வெளியிட்ட புத்தகம் குறிப்பிடுகிறது.
திருவாத்தி மரத்தின் அடியில் அகத்தியர்க்கு ஸனகாதி முனிவர்களுடன் சிவபெருமான் திருமணக் காட்சி கொடுத்தது. இந்த திருவாத்தி மரத்தின் வயது 5000 வருஷங்களுக்கு மேல்.

விக்ரமாதித்தன் வழி பட்ட ஸ்தலம்.மிக அபூர்வமாக, இங்கு, வன துர்க்கைக்கு மான் வாஹனம் உள்ளது. வன துர்க்கை விக்ரஹத்தில் விக்ரமாதித்தன் வழிபடும் காட்சியும் உள்ளது.பெரிய அளவில் அகத்தியர் விக்ரஹம் உள்ளது.

திருவக்கரையில் துன்முகி  அரக்கியை சம்ஹாரம் செய்த காளி, அதே அவதாரத்தில் சண்டமுண்டனை இங்கு வதம் செய்தாள். ஆகையால் சாமுண்டேஸ்வரி என்று பெயர்.அரக்கி கர்ப்பமாக இருந்ததால், அவள் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியில் எடுத்து தனது  காதில் குண்டலமாக அந்த குழந்தையை வைத்துக் கொண்டு அரக்கியை வதம் செய்தாள். திருவக்கரையில்

இந்த வதம் செய்த அம்பாள் அதே கோலத்தில் இங்கே காட்சிதருகிறாள். திரிபுர சம்ஹாரதிற்கு புறப்பட்ட சிவ பெருமானின் தேர் அச்சு முறிந்தது. அவ்வழியாக வந்த அகத்தியர் இங்குள்ள முருகனை வழிபட்டு பின் அம்பாளிடம் திருமணக் காட்சி வேண்ட, அம்பாளும் இறைவனைத் தடுத்து இங்கு அழைத்து வந்து திருமணக் காட்சி கொடுத்ததால் ,தடுத்தாட்கொண்ட நாயகி என்று பெயர்.

இன்றும் ஒவ்வொரு சித்ரா பௌர்ணமியன்றும், முருகன்,  அச்சிறுபாக்கத்திலிருந்து சுவாமியையும் அம்பாளையும் ஊர்வலமாக இந்த ஸ்தலத்திற்கு அழைத்து வந்து திருமணக் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடந்து வருகிறது.

சுமார் 5300 வருடங்களைக் கடந்து நிற்கும் இவ்வாலயத்திற்கு பல்லவ பேரரசர்களும், சோழ மன்னர்களும் ஏராளமான திருப்பணிகள் செய்திருக்கின்றனர் என்பதை இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.

தெற்கு வாயில் வழியாக உள்ளே சென்றால் கிழக்கு நோக்கிய கருவறையில் தான்தோன்றீஸ்வரர் காட்சி தருகிறார். தெற்கு நோக்கி அன்னை உமாதேவியார் தடுத்தாட்கொண்ட நாயகியாக அருள்பாலிக்கின்றார்.

சுற்றுப்பிராகாரத்தில் தனிச்சன்னதியாக தெற்கு புறத்தில் வடக்கு நோக்கி ரண பத்ர காளி சன்னதி அமைந்துள்ளது. திருவக்கரை வக்ரகாளியே இங்கு ரணபத்ரகாளியாகக் காட்சி கொடுக்கிறாள். சண்டன், முண்டன் என்ற இரு அசுரர்களை தேவர்கள் வேண்டுகோளின்படி அழித்த தேவி இவள்தானாம்.

இந்த ரணபத்ரகாளியை விக்கிரமாதித்தனும், பட்டியும் தரிசித்து வழிபட்டதாகவும், அதன் பிறகுதான் உறையூர் சென்று வெக்காளியம்மனை அவர்கள் தரிசித்ததாகவும் தலபுராணம் கூறுகிறது.

இத்தலத்தில் காண்பதற்கரிய கோமடி சங்கு இருக்கிறது. ஒரு கோடி சங்கில் ஒரு சங்குதான் வலம்புரிச் சங்காகக் கிடைக்கும். அப்படி ஒரு கோடி வலம்புரிச் சங்கில் ஒரு சங்கே கோமடி சங்காக அமையுமாம்.

இந்தக் கோமடி சங்கை சாட்சாத் பரமேஸ்வரியின் ஸ்வரூபமான கோ(பசு) மடி, அதாவது பசுவின் மடிபோன்ற அமைப்பில் உருவாவது. இந்தக் கோமடி சங்கு இக்கோயிலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தோன்றி சுமார் ஆயிரம் வருடங்களுக்கு மேலிருக்குமாம். 

இந்த கோமடி சங்கால் சுத்த பசும்பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்தோமானால் பரமேஸ்வரியே பரமேஸ்வரனுக்கு பாலபிஷேகம் செய்தது போன்றதாகுமாம். இதைச் செய்வோருக்கும், தரிசிப்போருக்கும் பல கோடி நன்மை கிடைக்கும் என்பதை திருவாடுதுறை ஆதீனத்தில் உள்ள ஓலைச்சுவடியில் காணலாமாம்.

இத்தலத்தின் தலவிருட்சம் திருஆத்தி மரமாகும். இத்தலத்தில் வடக்கில் காணப்படும் இம்மரத்தின் கீழ்தான் அகத்தியர் தவமிருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஏறக்குறைய இரண்டாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்ததாம்.

சுற்றுப்பிராகாரத்தின் மேற்கில் கனக துர்க்கை புடைப்புச் சிற்பமாகக் காட்சி தருகிறார். அருகே ஒரு மான் நிற்க, எருமைத் தலையை மிதித்தபடி சுற்றிலும் கிளி, பட்டி, வேதாளம் மற்றும் சங்கு சக்கர கதாயுதத்துடன் காட்சி தருவது விசேஷமான வடிவம் ஆகும். இந்த கனகதுர்க்கை பித்ரு தோஷம் நீங்க அருள்பாலிப்பதாகவும் நம்பப்படுகிறது. 

முதலாம் குலோத்துங்கச் சோழனும், இரண்டாம் இராஜ இராஜ சோழனும் இக்கோயிலுக்கு நிலம் தானமாக வழங்கியுள்ளதை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

இப்போதுள்ள ரவிச்சந்திரன் சிவாச்சாரியாரின் மூதாதையர்கள் சூரியன் சந்திரன் இருக்கும் வரை சுவாமிக்கு பூஜை செய்வதாக சங்கல்பம் செய்துள்ளதாக கல்வெட்டு கூறுகிறது. 834 ம் வருஷம் முதல் (சுமார் 1200 வருஷங்கள்) இவர்கள் பரம்பரை பரம்பரையாக சுவாமிக்கு பூஜை செய்து வருகிறார்கள்.

காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், ரவிச்சந்திர சிவாச்சாரியாருக்கு, அவரது இறை சேவையைப் பாராட்டி, "பகவத் சேவை மணி " என்று சான்றிதழ் கொடுத்தள்ளார்கள்.

காலத்தைக் கடந்து நிற்கும் தடுத்தாட்கொண்ட நாயகி உடனுறை தான்தோன்றீஸ்வரர் திருத்தலத்துக்கு குடும்பத்தோடு வந்து தரிசியுங்கள். பல அதிசயங்களை தன்னுள் கொண்டிருக்கும் ஆலயங்களில் இதுவும் ஒன்று.

சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் அச்சிறுபாக்கத்தை அடுத்து தொழுபேடு என்ற இடத்தில் இறங்கி சுமார் 1 கி.மீ. தூரம் வடக்கில் சென்றால் இத்தலத்தை அடையலாம்.

No comments:

Post a Comment