Tuesday, July 5, 2016

#‎ஆஷாட_நவராத்திரி‬ (‪#‎வாராஹி_நவராத்திரி‬)

#‎ஆஷாட_நவராத்திரி‬ (‪#‎வாராஹி_நவராத்திரி‬) (05.07.2016 முதல் 14.07.2016 வரை)
-
வசந்த நவராத்திரி நல்பக்தியையும், அந்த நல்பக்தியால் நல்வாழ்வையும் அளிக்கக் கூடியது. ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை முதல் நவமி வரையிலான திதிகள் அம்பிகைக்கு உரியன தான்.
-
நவராத்திரி பூஜை என்பது ஒன்பது நாட்கள் இரவில் செய்யக்கூடிய பூஜையாகும் பொதுவாக நவரத்திரி பூஜை வருடத்திற்கு நான்கு முறை கொண்டாடப்பட வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
-
சிவனை வழிபடத் தகுந்த ஒரு ராத்திரி சிவராத்திரி. சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி. அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாளும், அவற்றுள் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழா தான்.
-
பன்னிரண்டு மாதங்களுக்கும் பன்னிரண்டு விதமான நவராத்திரிகள் உண்டு என்கின்றன சாக்த சாஸ்திரங்கள். அந்த பன்னிரண்டிலும் மிக முக்கியமானவை நான்கு நவராத்திரிகள்.
-
‪#‎ஆனி_மாதம்‬ அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் ‪#‎வாராஹி‬ ‪#‎நவராத்திரி‬ என்று அழைக்கப்படுகிறது.
-
‪#‎புரட்டாசி_மாதம்‬ அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் ‪#‎சாரதா_நவராத்திரி‬ என்று அழைக்கப்படுகிறது.
-
‪#‎தை_மாதம்‬ அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் ‪#‎சியாமளா_நவராத்திரி‬ என்று அழைக்கப்படுகிறது.
-
‪#‎பங்குனி_மாதம்‬ அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் ‪#‎வசந்த_நவராத்திரி‬ என்று அழைக்கப்படுகிறது.
-
வளமையையும், செழுமையையும், மகிழ்ச்சியையும் தரவல்ல காலம் என்பது விவசாயத்தின் ஆரம்பக் காலமும், நிறைவுக் காலமும் தான்.
-
ஆனி - ஆடி மாதங்களில் புதுப் புனலாக ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுக்கின்ற காலம். பூமித் தாயே சூல் கொண்டு, பயிர்கள் அனைத்தையும் கருக்கொள்கின்ற காலம்.
-
விவசாயம் செழிக்க வளம் பெருக அம்பிகையை வழிபடக்கூடிய காலம் ஆனி - ஆடி மாதம். இந்த காலத்தில் அம்பிகையை, விவசாயம் பெருகி உலகம் சுபிக்ஷமாக விளங்க மனமுருக பிரார்த்தனை செய்வதாகவே ஆஷாட நவராத்திரி அமைந்திருக்கின்றது.
-
பொதுவாக ஆஷாட நவராத்திரி தானிய அபிவிருத்திக்காக செய்யப்படுவது. வடமாநிலங்களில் சில இடங்களில் பிரபலமாகக் கொண்டாடப்படுகின்றது.
தமிழகத்தில், தானியக் களஞ்சியமாக விளங்குகின்ற தஞ்சை மாநகரத்தில் அமைந்திருக்கக் கூடிய பிரகதீஸ்வர் கோயிலிலும் ஆஷாட நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
-
ஆஷாட நவராத்திரி வராஹி தேவிக்கு உரியதாக சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. வராஹி தேவியின் ரூப த்யான ஸ்லோகம், அம்பிகையின் கரங்களில் விவசாயத்திற்கு ஏற்ற ஏர்க் கருவியும், உலக்கையும் கொண்டு அருள்வதாகக் கூறுகின்றது.
-
தஞ்சாவூர் பெரிய கோயிலில் வராஹி தேவிக்கு ஆஷாட நவராத்திரி விவசாய வளமைக்காக கொண்டாடப்படுகின்றது.
-
வராஹி தேவி, தேவீ புராணங்களின் படி ஸப்த மாதர்களில் ஒருவராகவும், வராஹ புராணத்திலும், ஸ்ரீ நகர உபாஸனையிலும் அஷ்டமாத்ருகா தேவதைகளில் ஒருவராகவும் வணங்கப்படுகின்ற தெய்வம்.
-
வார்த்தாலி என்று அழைக்கப்படக்கூடிய வராஹி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத் தலைவிகளில் ஒருவராக விளங்கக் கூடியவள். அளப்பரிய சக்தி கொண்டவள். வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை உடனடியாக அருளுபவள்.
-
வாழ்வில் ஏற்படக்கூடிய எதிர்ப்புகளை நீக்குபவள். விவசாயம் சம்பந்தமான தொழில்களில் லாபம் பெருக அருள்புரிபவள். வீடு, நிலம் சம்பந்தமான விஷயங்களில் வெற்றிகளை அருளுபவள். இல்லம் எனும் வீட்டில் என்றும் தானியங்கள் நிறைந்திருக்கச் செய்பவள். மிக விரைவில் பலன் அளிக்கக் கூடியவள்.

ஆஷாட நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும், ஸப்த மாதா தெய்வங்களையும், அஷ்ட மாத்ருகா தெய்வங்களையும், வழிபாடு செய்வதும், எட்டாம் நாளில் வராஹி தேவியைப் போற்றுவதும் வளமான வாழ்க்கையை நல்கும்.
-
ஆஷாட நவராத்திரியில் அம்பிகையை வழிபாடு செய்து, ஆனந்தமான நல்வாழ்வு வாழ பிரார்த்திப்போம்.
-
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
-

No comments:

Post a Comment